புதன், 23 ஜூன், 2010

ஒரு வித்தியாசமான அனுபவம்

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை குட்டிப்பெண்கள் வீட்டுக்குப் போய் சிறிது நேரம் பொழுது போக்கிவிட்டு வீடு திரும்பினேன். எங்கள் கதவருகில் நின்றிருந்த ஒன்பதாம் யூனிட் நண்பர் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த எனக்குப்
பெரிய அதிர்ச்சி. எங்கள் சமையலறை மேசையில் முழு ஆடு (உரித்ததுதான்) கிடத்தப்பட்டு மேசை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

பக்கத்தில் எனது கணவர் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தார். "என்ன நடந்தது?" என்று கேட்டேன். "ஆட்டிறைச்சி சாப்பிடுவீர்களா? என்று கேட்டார். 'ஆம்,' என்றதும் இதைக்கொண்டு வந்து கிடத்தி விட்டுப் போகிறார்," என்றார்.

"என்ன செய்வது? யாரிதை வெட்டுவது அப்படியே rabish bin இல் போட்டு விடுவோமா?" என்று கேட்டார். அப்படிப் போடுவதானாலும் துண்டுகளாக வெட்டித்தான் போட வேண்டும் "நீங்கள் இப்போ போய் நண்பர் சந்தோஷை அழைத்து வாருங்கள் பின் என்ன செய்வதென்று யோசிப்போம்," என்றேன்.

என் கணவர் என்ன சொன்னாரோ சந்தோஷும் (இவர்தான் பக்கத்து வீட்டுக் குட்டிப் பெண்களின் தந்தை.) தன்னிடமிருந்த பெரிய கத்தியுடன் வந்தார். அது மரக்கறி வெட்டத்தான் உபயோகப்படும். வந்து ஆட்டைப் பார்த்துவிட்டு, "ஓ! அங்கிள் இதனால் வெட்ட முடியாது," என்று சொல்ல என்னிடமிருந்த ஓரளவு பெரிய கத்தி ஒன்றைக் கொடுத்தேன்.

"இன்று நீங்கள் என்னை ஒரு butcher ஆக்கி விட்டீர்கள்," என்று சிரித்தவாறே வெட்டத் தொடங்கினார். உதவியாளராக நான். ஐந்தேகால் மணிக்குத் தொடங்கிய வேலை அரை மணி நேரத்தில் முடிந்ததது.

அவரிடம் "உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மீதியை இந்தப் பொலிதீன் பைகளில் போட்டு விடுகிறீர்களா?" என்று கேட்டேன். எல்லா வேலைகளும் முடிந்ததும் இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு போய் இரண்டு நண்பர்கள் வீட்டில் கொடுத்து விட்டு வந்தார். மற்றவைகளை மறுநாள் வேறு மூன்று நண்பர்கள் வந்து எடுத்துக் கொண்டு போனார்கள். அன்று அந்த மேசையைச் சுத்தம் செய்யும் வேலையும் என்னுடையதாயிற்று.

அடுத்த தடவை அந்த நண்பரைச் சந்தித்த போது எங்களுக்கு இனிமேலும் இப்படி வேலை தராதீர்கள் என்று அன்பாகக் கேட்டுக் கொண்டோம்.

மேலே இருப்பது என் பேரன் பாடசாலையில் படித்த காலத்தில் செய்த ஒரு ப்ரொஜெக்ட்.

செவ்வாய், 15 ஜூன், 2010

அப்பா செய்த மேடை

வீட்டிலிருக்கும்போது நான் ஏதாவது வேலைகள் இருந்தால் மகனைத் தொட்டிலில் படுக்கவைத்து விட்டுச் செய்வேன். அவர் எழுந்துவிட்டால் இமா தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக் கொண்டு தொட்டிலை ஆட்டுவா. சில வேளைகளில் பாட்டைக் கேட்டுக் கொண்டு மகன் திரும்ப நித்திரையாகி விடுவதுமுண்டு.

ஐந்து வயதானதும் நான் கடமையாற்றிய பாடசாலையிலேயே இமாவைச் சேர்த்தோம். அது பெண்கள் பாடசாலை. ஆனாலும் முதலாம், இரண்டாம் வகுப்புகளில் ஆண் குழந்தைகளும் படித்தார்கள். அங்கும் எனக்கு முதல் வகுப்புத்தான் (ஆண்கள் பிரிவு) கிடைத்தது.

பாடசாலையில் நடைபெற இருந்த நிகழ்வொன்றில் எல்லா வகுப்பு மாணவர்களும் ஏதாவது பாடல், நடனம் அல்லது நாடகம் கொடுக்க வேண்டுமென அதிபர் உத்தரவிட்டார். இரண்டு வகுப்பு மாணவர்களையும் சேர்த்து சக ஆசிரியரும் நானும் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய பாடல் பழக்கினோம். உடைகள் சிறகுகள் எல்லாம் அழகாகத் தயாரித்தோம்.

குறிப்பிட்ட தினத்தன்று ஒத்திகை பார்க்க மேடைக்கு அழைத்துச் சென்ற போது இமா "மேடையில் நான் ஏற மாட்டேன், உடைந்து விடும்," என்று அழ ஆரம்பித்தா. என்னசெய்வதென நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க அங்கு வந்த அதிபர் "இமா, இது உங்கள் அப்பா செய்த மேடைதான். உடையவே உடையாது," என்று சொல்லிச் சமாளித்தார். பின்னர் யாவும் ஒழுங்காக நடந்தன.

பின்னேரம் அப்பா வீடு வந்ததும், "நீங்கள் செய்த மேடையில் ஏறி நான் பாட்டுப் பாடினேன் அப்பா," என்றா.