புதன், 18 ஆகஸ்ட், 2010

ஜீனோவின் அழைப்பிற்கு இணங்க - செபா

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
செபா.
  
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அல்ல. எனது பெற்றோர் இருவரதும் பெயர்கள் இந்த ஆரம்பத்தைக் கொண்டுள்ளதால் அதனை என்  பெயராக்கினேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
உண்மையில் இது பற்றி முதலில் நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. 'இது இமாவின் உலகம்' வலைப்பதிவைப் பார்த்ததும் எனக்கு இப்படி ஒன்று ஆரம்பிக்கலாமென்று தோன்றியது. அதற்கான உதவியும் இமாவிடமிருந்து கிடைத்தது. இதுவே என் வலைப்பதிவு ஆரம்பமான கதை.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எதுவும் செய்ததில்லை. அறுசுவையில் அறிமுகமானவர்கள் அன்போடு வருகிறார்கள். பாசமாகப் பேசுகிறார்கள்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நான் அனுபவித்து ரசித்த விடயங்கள் தான் எல்லாமே. விளைவு என்று சொல்வது என்றால் படிப்பவர்கள் சொல்லும் கருத்துகள், அது தரும் சந்தோஷம் இவை. 

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
ஆம், பொழுது போக்கென்றே கொள்ளலாம்.
 
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?  
ஒரே பதிவு மட்டுமே உள்ளது. வேறு பதிவு எழுத முயலவில்லை. இதை இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
 
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பொறாமை ஏற்படவில்லை மற்றவர்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டது உண்டு. நான் எப்போதுமே மற்றவர் மீது பொறாமைப் படுவதில்லை.

9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதலில் உங்களைத் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதலில் பாராட்டியது என் மகள் இமா தான். அதுதான் மேலும் பதிவுகள் போடத் தூண்டியது.  
ஹைஷ், ஜீனோ, வானதி, அதிரா, இலா, ஸாதிகா, செல்வி, ஆசியா, சந்தனா, ஜெய்லானி, இன்னும் சிலர் என் வலைப்பூவுக்கு வந்து என்னை உற்சாகப் படுத்துகிறார்கள். விருது கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

 10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
நான் செபா.  
பிறந்த ஊர் மட்டக்களப்பு.  
வசித்தது: திருகோணமலை
படிப்பித்தது: மட்/கோட்டைமுனை ரோ. க. தமிழ் பெண்கள் பாடசாலை.  
தி/புனித மரியாள் கல்லூரி.  
தி/புனித சூசையப்பர் கல்லூரி 
கணவர் இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர். பிள்ளைகள் இருவர். ஒருவர் இமா, மற்றவர் மகன். இரு பேரப் பையன்கள், ஒரு பேர்த்தி. தற்போது எல்லோரும் வசிப்பது நியுசிலாந்தில்.  
நண்பர்கள் பலர். மட்டக்களப்பு நண்பர் அத்தனை பேரின் தொடர்பும் விட்டுப் போயிற்று. இப்போது திருகோணமலை நண்பர்கள், என் மாணவர்கள்  சிலர் & அவர்கள்  குடும்பத்தாரின்  நட்புகளே தொடர்கின்றன.
இப்போது இவ்வலைப் பதிவின் மூலமாகவும் நண்பர்கள் சிலர் கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.  
பிடித்தவை & பொழுது போக்குகள்:- வாசிப்பது, இயற்கை அழகை ரசிப்பது, குழந்தைகளின் குறும்புகள், நல்ல பாடல்களைக் கேட்பது, நண்பர்களுடன் பேசுவது, கணினியில் தமிழ் இலக்கிய நூல்கள் வாசிப்பது, தோட்டம் செய்வது, கைவினைப் பொருட்கள் செய்வது. அறுசுவை இணையத்தளத்தில் கைவினைக் குறிப்புகள் சிலது வெளியாயிற்று. கடைசி இரண்டும் இப்போது முடிவதில்லை.  ஆனாலும் பார்த்து ரசிப்பேன். 
பிடிக்காதவை:- மற்றவர்களைப்  பற்றிப் பேசுவது, பொறாமைப் படுவது, காண்பவை எல்லாவற்றிலும் ஆசைப்படுவது.


ஜீனோவின் அழைப்பிற்கு  இணங்க இந்தத் தொடர் பதிவினை எழுதியுள்ளேன். எல்லோரையும் போல வேகமாக என்னால் செயற்பட முடியவில்லை. தாமதமாகவேனும் எழுத முடிந்ததே என்று மகிழ்ச்சியடைகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். அழைப்புக்கு நன்றி ஜீனோ.

அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்தத் தொடரைத் தொடருமாறு நான் அன்புடன் அழைப்பது திரு. ஹைஷ் அவர்களை. மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

அன்புடன் செபா. 

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

திகைத்துப் போனேன்

எங்கள் விட்டிலிருந்து  ஐந்து நிமிட நடை தூரத்தில் எங்கள் நண்பர்
வினோத் வசிக்கிறார்.
மூன்று வருடங்களின் முன்னர் அந்த இல்லத்தை வாங்கியதுமே எங்களுடன் பழக ஆரம்பித்து விட்டார். தாய், தந்தை, ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள் சேர்ந்த சிறிய குடும்பம். இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்.
கடந்த கோடை விடுமுறையில் தாயகம் செல்லும் போது அவர்களது செல்லப்பிராணிக்கு (பூனைக்குட்டி) உணவு வைக்கும் படியும்  சிறிய தோட்டத்திற்கு நீர் ஊற்றி விடும்படியும் கேட்டுக் கொண்டார்கள். 
அதற்காக அங்கு போய் வரும் போது இரவு வேளையில் வீட்டில் தங்கும் அவரது நண்பர் பண்டார என்பவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் நன்றாகப் பகிடியாகப் பேசுவார். வினோத் குடும்பத்தாரைப் போலவே இனிய சுபாவங்கள் உள்ளவர்.
ஒன்றரை மாதங்கள், விடுமுறை முடிந்து வினோத் வந்ததும் நாங்கள் தினமும் போவது நின்று விட்டது.
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் நாங்கள் 'walk'  போய்க் கொண்டிருக்கையில் பின்னால் யாரோ அழைப்பது கேட்கவே திரும்பினோம். பண்டார வியர்வை சொட்ட ஓடி வந்து "எங்கே போகிறிர்கள்? நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் 
வீட்டிற்கு வரலாமா?" என்று கேட்டார். "சரி" என்றதும் காரை அடுத்த தெருவில் நிறுத்தியிருக்கிறேன். பிறகு வருகிறேன் என்று போய் விட்டார்.
நாங்கள் நடையை முடித்து வீடு வந்து பத்து நிமிடங்களில் வந்தார். "நான் காருக்குப் போய் விட்டு உடனே வருவேன்." என்றவர் மீண்டும் வரும் போது பொலித்தீன் பைகளில் பொருட்களுடன் வந்தார். அவற்றை வைத்து விட்டு மீண்டும் போய் இன்னும் சில பொதிகளை எடுத்து வந்து வீட்டினுள் வைத்தார். "ஆன்டி, இவையெல்லாம் உங்களுக்குத்தான்." என்றார்.

பொருட்களைப் பார்த்து எங்களுக்கு ஒரே திகைப்பு. பால், பழங்கள், கீரைவகை, பலவித காய்கள் மட்டுமன்றி பாண், fozen chiken  என்று இரண்டு வாரங்களுக்குப் போதுமான பொருட்கள் இருந்தன. 
நான் கொடுத்த பட்டியலின்படி அன்று காலை தான் ஒருவாரத்திற்குப் 
போதுமான அத்தனை பொருட்களையும்  மகள் வீட்டார் கொண்டு 
வந்திருந்தார்கள். 
எதை எப்படி வைப்பது என்று கூறியவர், "நான் இப்போ வழிபாட்டுக்காகக் கோவிலுக்குப் போகிறேன்." என்று விடை பெற்றார்.
எல்லாவற்றையும் ஒருவாறு ஒழுங்கு செய்துவிட்டு வந்து உட்காரவும் தொலை பேசி அழைப்பு வரவும் சரியாக இருந்ந்தது.
எனது வியட்நாம் நண்பி, "நான் இப்போ அங்கு வருகிறேன்." என்றார். சற்று நேரத்தில் வந்தவர் கையில் பை நிறைய அப்பிள் பழங்கள். 

அன்று எங்களுக்குக் கிடைத்த அப்பிள் பழங்கள் மட்டுமே நாற்பத்தாறு. வீட்டில்  இருப்பதோ இரண்டே பேர்.
அன்று நான் நரி முகத்தில் தான் விழித்திருக்க வேண்டும்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

I'm New

நேற்று சின்னப் பெண்கள் இருவரும் சுனாமி போல் வேகமாகப் பெரும் ஒலியுடன் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள்.

எதைக் கொட்டிக் குழப்பப் போகிறார்களோ என்று  நினைப்பதற்குள் மேசையில் இருந்த பொருட்கள்  நிலத்தில் சிதறி விட்டன. பலவிதமாக  சமாளிப்பதற்கு முயற்சித்தும் பலனில்லை. அவர்களின்  தாய்  வந்து "வாருங்கள், சிறுவர் பூங்கா போகலாம்,"  "party க்குப் போகலாம்" என்று என்னென்னவோ சொல்லிப்பார்த்தார். அவர்கள் நம்புவதாயில்லை.

நான் தொலைபேசியில் அவர்களின் தந்தையுடன் பேசுவது
போல்  "ஒ! நீங்கள் பார்க் போகிறீர்களா? சரி, நீங்கள் தனியே  போய் வாருங்கள்.  பிள்ளைகள் இங்கேயே நிற்கட்டும்," என்றேன்.

உடனே அனன்யா வீட்டிற்கு  ஓடினாள். ஓடிய வேகத்திலேயே திரும்பி விட்டாள். தன்னைத் தூக்கி மேசை மேல் இருக்க விடும் படி கேட்டாள். என் கணவர் அவளைத்  தூக்கி விட்டதும் பெரியவள் என்னிடம் தன்னையும் தூக்கி விடும் படி கேட்டாள்.
  நான், "என்னால் முடியாது. I'm old. I can't."  என்றேன். உடனே "But I'm new." என்ற பதில் வந்தது. தாய் சிரித்து விட்டு ஏதேதோ சொல்லி அழைத்தும் போக மறுத்து "Want a lolly, want a lolly" என்று பாட ஆரம்பித்தார்கள்.

வேறு வழியின்றி அதைக் கொடுக்கவும், தொடர்ந்து "Want a biscuit." என்று  பாடினார்கள். "வேறு என்ன தொடரப் போகிறதோ! இந்தப்
பாடல்  இலகுவில் முடியாது." என்று தாய் "வாருங்கள், கடைக்குப் போய் உடைகள், சப்பாத்துக்கள், toys எல்லாம்  வாங்கலாம்." என்று  சொல்லி அழைத்துப் போனார்.

இக்காலத்தில் குழந்தைகளைச் சமாளிக்கத் தனித்திறமை வேண்டும்

புதன், 4 ஆகஸ்ட், 2010

சுற்றிச் சுற்றி ..

















"சுற்றி சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்ளே" என்பது போல நானும் திரும்பத்  திரும்ப ஒரு சிறிய வட்டத்தினுள்ளே வளைய வந்து கொண்டிருக்கிறேன்.

ஆமாம் இந்த நாட்டில் எனது உலகம் மிகவும் சிறியதே. இந்த தொடர் மாடிக் குடியிருப்பிற்கு வந்ததிலிருந்து சில சம்பவங்கள், இங்கு குடி வருவோரெல்லாம் முதலில் எங்களை வினோதமான பிராணிகளைப் பார்ப்பது போல்  பார்த்தாலும் சில நாட்களில் நண்பர்களாகி விடுவார்கள். அதன் பின்னர் சில உதவிகளையும் கேட்பார்கள். முதலாவது கோடை விடுமுறையில்  ஒரு மாலைப் பொழுதில் அண்மையில் இருந்த மகன் வீட்டுக்குப் போய் விட்டுத் திரும்பினோம். கதவருகே ஒரு பொலித்தீன் பை வைக்கப்பட்டிருந்தது. உள்ளே பழங்களும் வேறு உணவுப் பொருட்களும் கூடவே ஒரு சிறு காகிதத்தில் சிறு செய்தி ஒன்றும் எழுதப்பட்டிருந்தது. "நாங்கள் இரு வார விடுமுறையில் போகிறோம். தயவு செய்து எங்கள் தபால்களை சேகரித்து வையுங்கள் எங்கள் 'rubbish bin' ஐயும் collection அன்று வெளியே வைத்து விடுங்கள்."

இது போன்று இங்குள்ளவர்கள் வெளியே செல்லும் சமயங்களில் எல்லாம் சிறு சிறு உதவி கேட்பார்கள். பதிலுக்குத் தாங்கள் என்ன கொண்டு வர வேண்டும் என்றும் கேட்பார்கள்.
எதுவும் வேண்டாம் என்றாலும்  நன்றிக்கடனாக ஏதாவது இனிப்புகள்
வந்து சேரும். அவற்றை  எங்கள் பக்கத்து வீட்டுச் செல்லப் பெண்கள் சுவைப்பார்கள்.

ஒருவர் தனது திறப்பை எங்களிடம் தந்து இது உங்களிடம் இருக்கட்டும். எப்போதாவது என்னிடம் உள்ளது தவறிப் போனால் உதவியாக இருக்கும் என்றார்.

இன்னுமொருவர் வெளியே செல்கையில் மடிக்கணணியைத் தந்து விட்டுப்போவார்.

எங்கள் யூனிட்டுக்கு மேலுள்ள யூனிட்டில் தாயும் மகளுமாக இரு  சீனப் பெண்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வெளியே போகும் போதெல்லாம் balcony  பக்கமுள்ள கதவைத் திறந்து வைத்து விட்டுப் போவார்கள். ஒரு நாள் அவர்கள் வந்து, "நாங்கள் திறப்பை உள்ளே வைத்துப் பூட்டி விட்டோம். ஏணி ஒன்று தர முடியுமா?" எனக் கேட்டார்கள். எங்களிடம் ஏணி இல்லை. "வேண்டுமானால் உயரமான stool  ஒன்று தருகிறோம்." என்று சொல்லிக் கொடுத்தோம். உயரம் போதாததால் ஒரு கதிரையின்  மேல் அதனை பின் விறாந்தையில் வைத்துவிட இளம் பெண் அதைப் பிடித்து நிற்கத் தாய் நீர் வடியும் குழாய் வழியே ஏறி மேலே போக முயன்றார். பல முறை முயன்றும்  முடியாது போகவே இருவரும் சீன மொழியில் ஏதோ பேசிக் கொண்டார்கள். சத்தங் கேட்டு வெளியே வந்த பக்கத்து யூனிட் பையன் மேலே ஏறித் திறப்பை எடுத்துக் கதவையும் திறந்து விட்டார்.

இதற்கு முன்னர் இருந்தவர்களுக்கும் இதே போல ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட போது அவர்களில் ஒருவர் சமையல் அறையின் யன்னல் அருகே stool  ஐ வைத்து ஏறி யன்னலின் கண்ணாடிகளைக் கழற்றி விட்டு உள்ளே குதித்து எடுத்தார். பலனாக  காலில் பலமான அடியும் பட்டார்.

ஒன்பதாவது யூனிட் நண்பருக்கும் இதே போல் ஒரு முறை நடந்தது.

இவர், மற்றுமொரு நாள் அவசரமாக வந்து தனது செல்பேசி எண்ணைத் தந்து தனது அறைக்குப் போன பின் அழைத்தால் தவறுதலாக வைத்த போனைக் கண்டு பிடிக்கலாம் என்று சொல்லித் தன் அறைக்குத் திரும்பினார். எண்ணை டயல் பண்ணியதும் மணி ஒலித்தது. அவர் திரும்பி வந்து போன் கிடைக்கவில்லை என்றார். "உங்கள் காருக்கு அண்மையில் போய் நில்லுங்கள். இன்னுமொரு முறை முயற்சித்துப் பார்ப்போம்." என்றேன். திரும்ப மகிழ்ச்சியோடு வந்தார். 'காருக்குள் இல்லை. rubbish bin க்குள் இருந்து மணி அடித்தது." என்றார்.

இதன் முன்னரும் ஒரு மொபைல் போனை உடுப்புகளுடன் கழுவும் இயந்திரத்துள் போட்டு அதனைச் சித்திரவதை செய்த அனுபவமும் இவருக்கு உண்டு. அத்தோடு இவரும் ஒரு முறை திறப்பை உள்ளே வைத்து ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த அனுபவம் பெற்றவர்.

இப்படி எங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை  எல்லாம் எழுதினால் பதிவு நீண்டு விடும். எனவே விடை பெறுகிறேன்.

படத்தில் இருப்பது மாடிப் படிக்கட்டில் இருக்கும் அலங்காரம்.