வியாழன், 23 செப்டம்பர், 2010

உரையாடல்

வழக்கம் போல் சிறிது நேரம் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அனிக்கா வீட்டுக்குப் போனேன்.



கண்டதும் வரவேற்புப் பலமாக இருந்தது. இருவரும் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். கதை தொடங்கியது.



"கிராண்ட்மா, உங்கள் உடை அழகாயிருக்கிறது. காதணிகளும் அழகாயிருக்கின்றன." என்றார் அனிக்கா

"அப்படியா? நன்றி."



"ஆனால் நீங்கள் அழகாயில்லை." ("அப்படிச் சொல்லாதே,"

இடையே தாயின் குரல்)



"குழந்தை தானே. அவளது அபிப்பிராயத்தை சொல்கிறாள். விட்டுவிடுங்கள்." என்றேன் நான்.





"உங்கள் காதணிகளை எனக்குத் தருகிறீர்களா?"

"ஏன்?"

"நான் கலியாணம் செய்யப் போகிறேன்."

"யாரை?"

"அனன்யாவை."

"அவள் உன் தங்கையல்லவா?"

"பரவாயில்லை." என்றாள் அனிக்கா.



பேச்சை எப்படி மாற்றலாம் என்று யோசிக்கையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் கவனத்தை ஈர்த்தது.



உடன் அடுத்த வினா.



"கிரான்மா, இந்தப் பிள்ளைகள் என்ன பாடுகிறார்கள் சொல்லுங்கள்," என்றாள்.

"ஹிந்திப் பாடலின் பொருள் எனக்கு எப்படித் தெரியும்?" என்றேன்.

தலையில் கைகளால் தட்டி "Use your brain," என்றாள் அனிக்கா.



இந்தக்காலத்துக் குழந்தைகள் சுட்டிகள் தான்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பேரனும் பீஷும்

ஒரு முறை இனக்கலவரம் ஏற்பட்டபோது எங்கள் பகுதியிலிருந்த மக்கள் எல்லோருமே பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந்து விட்டார்கள். எங்கள் தெருவில் இருந்த நான்கு குடும்பங்கள் மட்டுமே வீடுகளில் தங்கி இருந்தோம்.

சுற்றி வர எங்குமே வெறிச்சோடிக்கிடந்தது. தூரத்தில் வீடுகள் எரிவதால் ஏற்பட்ட புகைமூட்டம். கோழிகள், ஆடுகள், பூனைகள் போன்ற பிராணிகள் உணவு தேடி அங்குமிங்குமாக அலைந்து  திரிந்தன.

எங்கள் பேரன் நன்கு பேசத்தொடங்கிய காலம்; "மியாவ், மியாவ்" என்று பரிதாபமாக ஒலி எழுப்பிற்று ஒரு பூனைக்குட்டி. பேரன் ஓடிப்போய்ப் பார்த்தார். மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்த அந்தப் பூனைக்குட்டியைப் பார்த்ததும் அதன் மேல் இரக்கம் ஏற்பட்டு மேதுவாகத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தார்.
 " பாவம் இதற்குச் சரியான பசி. ஏதாவது சாப்பாடு கொடுக்க வேண்டும்," என்றார்.
 
அவர் விருப்பப்படியே உணவு கொடுத்து, "இதனை விட்டுவிடுவோம்," என்றோம்.

அதைத்  துரத்தி விடுவதில் அவருக்கு இஷ்டம் இல்லை. "இந்த 'பீஷ்'  (Beesh - அவர் பூனைக்கு வைத்த பெயர்.) சாப்பாடில்லாமல் செத்துப் போகும். நாங்களே வளர்ப்போம்," என்று எல்லோரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பூனைக்குட்டியுடன் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். பூனை முனகலுடன் படுத்திருந்தது. அருகில் சென்று பார்த்த போது ஒரு காலில் கணுக்காலின் கீழே வீங்கிக் கிடந்தது. 
 
தெரிந்ததும் பேரன் அழ ஆரம்பித்து விட்டார். அவரைச் சமாதானப் படுத்துவது பெரும்பாடாகி விட்டது.

சற்று நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த பாட்டனிடம் முறையிட்டார். பூனையின் காலைப் பார்த்ததும் புரிந்து போனது. அதன் காலில் 'rubber band' மாட்டி இருந்தது. அதை அறுத்து விட்டதும் பூனை அமைதியாயிற்று.

பேரனும் சந்தோஷம் அடைந்தார். அது பூனையின் காலில் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தொடர்மாடி இல. 9

அன்று இரவு உணவு முடித்து வழக்கம் போல மருந்துமாத்திரைகள். 'இன்ஹேலர்' எல்லாம் உபயோகித்து முடித்துப் படுக்கைக்குப் போய் விட்டேன்.
 
'டக், டக்' என்று கதவில் ஒலி. 
எழுந்து வந்து பார்த்தேன். எங்கள் மாடி யூனிட் இளம் பெண் மேர்ஸி கலவரமடைந்த முகத்தோடு.

 "என்ன விடயம்?" எனக் கேட்டேன்.
 "ஒன்பதாவது யூனிட் நண்பருக்கு என்ன நடந்தது?"

"ஏன்?"  

"கதவு பூட்டி இருக்கிறது. உள்ளே லைட் எரிகிறது. கதவில் வெளிப்புறமாகத் திறப்பு உள்ளது. பல தடவை தட்டினேன் எந்த விதமான விடையும் கிடைக்கவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் என்னுடன் வருகிறீர்களா?" என்றார்.

நான் என் கணவரை அவருடன் அனுப்பினேன். இருவரும் கதவைத் தட்டிப் பார்த்த பின் காரைப் பார்த்து விட்டுப் பின் பக்கமாகப் போய், பின் பக்க மொட்டைமாடிக் கதவும் திறந்துள்ளதைப் பார்த்துள்ளார்கள்.

மீண்டும் கதவைத் தட்டிய பின் கதவைத் திறந்தால்.. உள்ளே நண்பர் கணனியில் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.
 
இவர்களிருவரையும் கண்டதும் சிரித்துக் கொண்டே வரவேற்றாராம். 
 
"நீங்கள் உயிருடன் தான் இருக்கிறீர்களா? உங்களுக்கு என்ன நடந்ததோ என்று நாங்கள் கவலைப்பட நீங்கள் உல்லாசமாக இருகிறீர்களா?" என்று சாவியைஅவரிடம் கொடுத்து விட்டு வந்தார்கள்.  
 
அடிக்கடி இப்படி ஏதாவது குளறுபடி செய்யாவிட்டால் இவருக்கு நிம்மதியாக இராதோ ?